நாகர்கோவில், அக். 10 –
தமிழ்நாடு அரசு நடத்தும் கலையால் கல்வி செய்வோம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை கல்லூரிகளில் கலைத் திருவிழாக்கள் நடத்த அரசின் உயர் கல்வித் துறையால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் நாகர்கோவில் கோணம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 22.09.2025 அன்று தொடங்கிய கலைத் திருவிழா 10.10.25 இன்று வரை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் கவிதைப் போட்டி முதல் கவனிக்க மறந்த காட்சிகள் என சுமார் 30 போட்டிகள் நடைபெற்றது.
மாணவர்களின் கலைத்திறன்களைக் கண்டெடுத்து வளர்ப்பதே இப்போட்டிகளின் நோக்கமாகும். நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். கலைத் திருவிழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுசீலாபாய் தலைமை தாங்கினார்.
கன்னியாகுமரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் சரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். வரலாற்று துறை பேராசிரியர் பனிதாசன் வாழ்த்துரை வழங்கினார். கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் சுகிர்தா பஸ்மத் நன்றியுரை வழங்கினார். கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இராஜம் மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



