நாகர்கோவில், ஜூலை 29 –
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு டெட் தேர்வை ரத்து செய்திட வேண்டும். கல்வியும் மருத்துவமும் மத்திய அரசு பட்டியலில் இருந்து மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வேண்டும். 2010க்கு முன்பு பணியாற்றிய ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தற்பொழுது நடைபெற்ற டெட் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் பதவி உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் வட்டார தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாக்கியமணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில் குமார், மாவட்ட பொருளாளர் ராபர்ட் பாபு, வட்டார செயலாளர் சாந்தகுமார், நாகர்கோவில் மாநகர தலைவர் கண்ணன், மாவட்ட துணை தலைவர் முருகராஜ், மாவட்ட இணை செயலாளர் மோகனச்சந்திரன் ஆகியோர் பேசினர். சிறப்பு விருந்தினராக மாநில பொருளாளர் தியாகராஜன் கலந்து கொண்டு போராட்டம் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஜான் உபால்ட், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக தனியார் பள்ளி மாநில செயலாளர் பிரேம் தாஸ், முருகானந்தம், வட்டார மகளிர் அணி செயலாளர் நளினி உட்பட பலர் கலந்து கொண்டனர். தோவாளை வட்டார செயலாளர் ஐயப்பன் நன்றி கூறினார்.



