ராமநாதபுரம், ஏப். 20 –
மிகுந்த துணிவு, மனவலிமை மற்றும் உறுதியின் சிறப்பான வெளிப்பாடாக, ஆட்டிசம் கொண்ட நான்கு சிறுவர் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பாக் ஜலசந்தி கடலில் நீரிணையை கடந்து 60 கிலோமீட்டர் இருவழி திறந்த கடல் நீச்சல் செய்து உலக சாதனை புரிந்தனர்.
நம்பிக்கையின் அலைகள் – “இந்தியா- இலங்கை இருவழி கடல் நீச்சல் சாதனை” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முயற்சி, யாதவி அறக்கட்டளை, விளையாட்டு அகாடமி மற்றும் இந்தியன் ஆட்டிசம் சென்டர் உடன் இணைந்து நடத்தியது.
இந்த நீச்சல் முயற்சி 2026 ஏப்ரல் 18ம் தேதி அரிச்சல் முனை கடற்கரையில் மதியம் 03.30 மணியளவில் தொடங்கி, ஏப்ரல் 19ம் தேதி காலை 09.27க்கு நிறைவு செய்தனர். இந்த சாதனை முயற்சியை வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மூலம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தனர்.
ஸ்ரீ அஷ்வத், லவ், குஷ் மற்றும் தன்வேஷ் ஆகிய 9 முதல் 11 வயதுடைய குழந்தைகள் 24 மணி நேரம் இடையறாத ரிலே முறையில் இந்தியா → இலங்கை → இந்தியா பாதையில் கடலில் நீந்தினர். இந்த முயற்சியின் போது, கடுமையான கடல் நீரோட்டங்கள், மாற்றமடையும் காலநிலை மற்றும் இரவு நேர நீச்சல் போன்ற பல சவால்களை எதிர்கொண்டனர். கடந்த எட்டு மாதங்களாக, இக்குழந்தைகள் நீச்சல் குளங்களிலும் திறந்த கடல் சூழலிலும் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு இந்த சாதனைக்கு தயாராகினர்.
” முடியாது என்பது இல்லை” என்பதே இந்த முன்முயற்சியின் கருப்பொருள் ஆகும். இதன் மூலம் ஆட்டிசம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளின் திறன்களை வெளிப்படுத்துவது, சமூகத்திற்கு உண்மையான சாதனைகளை அறியச் செய்து ஊக்கமளிப்பது மற்றும் மக்களின் ஓட்டுரிமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சென்னை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை முழுமையான மருத்துவ மற்றும் பாதுகாப்பு ஆதரவை வழங்கியது. அவசர மருத்துவ சேவைகள், அனுபவமிக்க மருத்துவர்கள் மற்றும் தொடர்ந்து உடல்நிலை கண்காணிப்பு போன்ற அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், பாதுகாப்பு குழு, பயிற்சியாளர்கள் மற்றும் படகு குழுவினர் முழு நேரமும் இணைந்து செயல்பட்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.
யாதவி சிறப்புத் தேவைகள் விளையாட்டு அகாடமியின் நிறுவனர் மற்றும் தலைமைப் பயிற்சியாளரான சதீஷ் சிவகுமார் கூறுகையில், “இந்த நீச்சல் போட்டி என்பது வெறும் தூரத்தைப் பற்றியது மட்டுமல்ல – இது மக்களின் கண்ணோட்டங்களை மாற்றுவதைப் பற்றியது ஆகும். திறமை என்பது வரம்புகளைக் கடந்தது என்பதை இந்த குழந்தைகள் உலகிற்கு நிரூபித்து வருகிறார்கள்.
நம்பிக்கையின் அலைகள் என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும், ஒவ்வொரு கல்வியாளருக்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு செய்தியாகும் – சரியான ஆதரவுடன், ஒவ்வொரு குழந்தையும் அசாதாரணமானதைச் சாதிக்க முடியும் என்பதே ஆகும்” என்றார்.



