நாகர்கோவில், ஜூலை 17 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான மீள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலந்துகொண்டு, தலைமையாசிரியர்களிடையே கலந்துரையாடி தெரிவிக்கையில்: குமரி மாவட்டத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் 100 சதவீத தேர்ச்சியுடன், தேர்ச்சி பெற்று சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
மேலும் சென்ற ஆண்டில் தேர்ச்சியை நூறு சதவீதமாக எட்டுவதில் இடையூறாக இருந்த காரணிகள் எவை எவை என விவாதிக்கப்பட்டது. மாணவரின் வருகை என்பது மாணவரின் தேர்ச்சியை பாதிக்கும் காரணியாக அமைந்து விடக்கூடாது என்பதில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அதிக அக்கறை கொண்டு செயல்பட வேண்டும். பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் போதிய அளவு இல்லாத பள்ளிகளுக்கு பள்ளி மேலாண்மை குழு மூலமாகவும், பள்ளி நிர்வாகத்தின் மூலமாகவும் ஆசிரியர்களை ஒழுங்கு செய்து இக்கல்வி ஆண்டின் ஆரம்பம் முதலே கற்றல் கற்பித்தல் பணியை தொய்வின்றி மேற்கொண்டு, மாணவர் நலன் காத்திட அறிவுறுத்தப்பட்டது.
கல்வி கூடம் அல்லாது, பிற சூழல் காரணமாக மாணவர்கள் சரியாக கற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பின் அதற்கு உரிய வழிகாட்டுதல்கள் மாவட்ட நிர்வாகம் சார்பாக அளிக்கப்பட உள்ளது. எனவே அத்தகைய மாணவர்களை அடையாளம் கண்டு , ஆசிரியர்கள் அப்படிப்பட்ட மாணவர் நலனில் அக்கறையுடன் செயல்படவும், சிறு குறு தேர்வுகள் மூலம் மாணவர்களின் அடைவினை மேம்படுத்திடவும் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து வரும் பருவ தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற தேர்ச்சியினை மீள் ஆய்வு செய்வதன் மூலம் மாணவர்களுக்கான தேர்ச்சி சதவீதம் உயர வாய்ப்புள்ளது என்பதே கருத்தில் கொண்டு முதல் பருவ தேர்விலிருந்தே அதிக அக்கறை கொண்டு மாணவர்களுக்கு பாடங்களை புகட்டிடவும், மீண்டும் மீண்டும் திருப்புதல்களை வழங்கிடவும் வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
மாணவர் எண்ணிக்கை குறைவாக காணப்படும் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதமும் குறைந்திருப்பது வருத்தம் அளிக்கும் ஒன்றாக காணப்படுகிறது. எனவே குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள், மாணவர்களின் வாழ்வில் அக்கறை கொண்டு அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கில் கடின உழைப்பினை தந்திடுதல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ச்சியாக, தேர்ச்சி குறைந்த பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டு மாதம் ஒருமுறை அறிக்கை சமர்பிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கூறினார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



