தேனி, செப். 16 –
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2025-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 30.09.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்
அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 100 % மாணவர்கள் சேர்க்கையை பூர்த்தி செய்யும் பொருட்டும் மற்றும் மாணவ மாணவிகளின் நலன் கருதியும் நேரடி சேர்க்கை 30.09.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் 40 வயதிற்குட்ட ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.
பயிற்சியில் சேருபவர்களுக்கு தமிழக அரசு மூலம் மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, விலையில்லா மிதிவண்டி, பாடப்புத்தகம், வரைபடக்கருவிகள், சீருடை (2 செட்), இலவச மூடுகாலணி வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற பயிற்சியாளர்களுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 100% வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படுகிறது.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தேனி, ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் (இருப்பு தப்புக்குண்டு சாலை, உப்பார்பட்டி) ஆகிய இடங்களில் நேரில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்து சேர்க்கை மேற்கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.50 மற்றும் சேர்க்கைக்கான கட்டணமாக ஓராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.185, ஈராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.195 நேரில் செலுத்த வேண்டும்.
மேலும் 2021-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். அதற்கு முந்தைய ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும்.
மேலும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தேனி ஐ.டி.ஐ – 04546-291240 மற்றும் 94990 55765, ஆண்டிபட்டி ஐ.டி.ஐ- 94990 55770, போடிநாயக்கனூர் ஐ.டி.ஐ – 94990 55768 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தொழிற்பயிற்சி சேர்க்கை தொடர்பாக தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.



