தென்தாமரைகுளம், பிப். 2 –
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மக்கள்தலைவர் கேப்டன் ரதயாத்திரை மற்றும் “உள்ளம் தேடி இல்லம் நாடி” நிகழ்ச்சி கொட்டாரம் சந்திப்பில் நடைபெற்றது. இதில் தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொட்டாரம் சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி, கேப்டன் ரத ஊர்வலம் தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன் தலைமையில், தேமுதிக சமூக வலைதள அணி துணைச் செயலாளரும், திருநெல்வேலி புறநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான வக்கீல் சிவக்குமார் நாகப்பன் முன்னிலையில் ஊர்வலமாக கொட்டாரம் சந்திப்பில் வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பொதுமக்களை சந்தித்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: கோட்டை முதல் குமரி வரை வந்து ரத யாத்திரை நிறைவு பெற்றுள்ளது. நமது கட்சிக்கு எல்லாம் நல்லதா நடக்கும்.
படித்தவர்கள் அதிகமாக இருக்கும் மாவட்டம் கன்னியாகுமரி. கன்னியாகுமரியில் தான் குமரி கண்டம் இருந்தது. தமிழ் மொழி பிறந்தது குமரி கண்டம் தான். ஆண்ட கட்சிக்கும் ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக தேமுதிக இருக்கிறது.2026 தேர்தலில் தேமுதிக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
அப்போது கன்னியாகுமரி சுற்றுலா தலம் மேம்படுத்தப்படும். தோவாளை மலர் சந்தையில் சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும். மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் மீனவர்கள் காக்கப்படுவார்கள். கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியரே இல்லை.கனிம வள கொள்ளை அதிகமாக உள்ளது. கனிம வள கொள்ளை தடுக்கப்படும். மயிலாடியில் கல் சிற்ப பூங்கா அமைக்கப்படும். சுசீந்திரத்தில் தடுப்பணை கட்டப்படும். தேமுதிக இடம்பெறும் கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் என்றும் கூறினார். இதில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



