தேனி, ஜுன் 1 –
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (31.05.2026) நடைபெற்ற நிகழ்வில், தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக இரா.வைத்திநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய 2015 ஆம் ஆண்டு அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழக அரசுப் பணியில் இணைந்த இவர், சேலம் மாவட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆகவும், தேனி மாவட்டம் உத்தமபாளையம் வருவாய் கோட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் சார் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், தர்மபுரி மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசு சார்ந்த இணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை திறம்பட வகித்துள்ளார்.
நிர்வாகத் திறன், மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகள், திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் ஆற்றல் மற்றும் நீண்டகால நிர்வாக அனுபவம் கொண்ட அதிகாரியாக அறியப்படும் இரா.வைத்திநாதன் தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டது மாவட்ட வளர்ச்சிக்கும், பொதுமக்கள் நலத்திட்டங்கள் மேலும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதற்கும் உறுதுணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட அளவிலான அரசு துறை அலுவலர்கள் மற்றும் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டு புதிய மாவட்ட ஆட்சித்தலைவரை வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தனர். “மக்கள் சேவையே உயர்ந்த சேவை” என்ற நோக்கத்துடன், தேனி மாவட்ட வளர்ச்சிக்கும், பொதுமக்களின் நலனுக்கும் முன்னுரிமை அளித்து பணியாற்றுவேன்” என புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் தெரிவித்தார்.



