தென்தாமரைகுளம், ஜுன் 23 –
தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளியில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி., ஸ்டாலின் உத்தரவின்பேரில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர் விபத்துகளைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ், கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளர் அருண் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் தென்தாமரைக்குளம் எல்.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் கால்வின் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். கன்னியாகுமரி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் இந்நிகழ்ச்சி குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்தும் 18 வயது நிரம்புவதற்கு முன்னர் வாகனம் ஓட்ட கூடாது எனவும் இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போது பெற்றோர்களை கட்டாயம் தலைக்கவசம் அணிவதை வலியுறுத்த வேண்டும் எனவும் “நோ ஹெல்மட்; நோ என்ட்ரி” குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சாலை பாதுகாப்பு குறித்த கேள்விக்கு சரியான பதில் அளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக ஆசிரியர் கிங்ஸ்லி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள், பள்ளி அலுவலகப் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.