தென்காசி, செப். 16 –
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தென்காசி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையும், தென்காசி நகராட்சியும் இணைந்து மருத்துவமனை சிஎம்இ கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது.
முகாமை தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இம்முகாமில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஜெஸ்லின் தன் சுத்தம், உடல்நலம் பேணுதல், பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துதல் மற்றும் தொற்று நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் பற்றி நகராட்சி பணியாளர்களுக்கு எடுத்துரைத்தார்.
இம்முகாமில் மருத்துவர்கள் மாரிமுத்து, கோபிகா, மணிமாலா, பிரவீன், செவிலியர் கண்காணிப்பாளர் பத்மாவதி, திருப்பதி, ராஜாதி ஜெகதா, ஆய்வக பணியாளர் ஹரிஹரன், காசநோய் சிகிச்சை பிரிவிலிருந்து சரவணன், எக்ஸ்-ரே பணியாளர் பாஸ்கர், செவிலியர் மாரீஸ்வரி மற்றும் செவிலியர் பயிற்சி மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் .
நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் என 150 பேர் இம்முகாமில் பங்கு பெற்று மருத்துவ சேவைகளை பெற்றுக் கொண்டனர். அனைத்து பரிசோதனைகளும் சிகிச்சைகளும் ஒரே இடத்தில் வைத்து அவர்களுக்கு வழங்கப்பட்டது. முகாமில் இரத்த அழுத்தம் மற்றும் ரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, ஈசிஜி, கண் பரிசோதனை, பல் பரிசோதனை, மார்புச்சளி பரிசோதனை, தோல் நோய் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை, கால் நரம்பு சுருள் சிகிச்சை, நுரையீரல் நோய் சம்பந்தமான பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் செய்யப்பட்டது. டிடிநோய் எதிர்ப்பு தடுப்பூசி அனைத்து பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் முகாமில் சிறப்பாக வழி நடத்திக் கொடுத்த மருத்துவமனை கண்காணிப்பாளருக்கும், மருத்துவமனை பணியாளர்களுக்கும் நன்றி கூறினார்.



