திருவெண்ணெய்நல்லூர், ஜன. 28 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காந்திநகரை சேர்ந்தவர் ராஜா மகன் விஜய் (20). இவர் விழுப்புரத்தில் டென்ட் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 25-ந் தேதி மாலை காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து அருகே உள்ள ஏரிக்கரைக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் இருவர் சென்று பார்த்தனர். அப்போது ஏரிக்கரை அருகே மழையம்பட்டு செல்லும் சாலையில் விஜய் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரது வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் நண்பர்கள் அவரை மீட்டு முதல் சிகிச்சைக்காக திருவெண்ணெய்நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் விஜய் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதையடுத்து இறப்பில் சந்தேக இருப்பதாக கூறி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலைக் கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


