திருவண்ணாமலை, அக். 30 –
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் டிசம்பர் 3ந் தேதி நடைபெறவுள்ளது. தீபத்திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்க திட்டமிட்டுள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இணையதளத்தின் மூலம் பதிவு செய்து முன்அனுமதி பெறவேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதானம் வழங்கவிரும்புவோர் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில்வரும் 3ந்தேதி முதல் 17ந்தேதிவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அளித்து அனுமதி பெறவேண்டும். மேலும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் முகவரி தெரிவிக்கும் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட சான்றுநகல் ஆகிய விபரங்களை விண்ணப்பத்துடன் அளிக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட இடத்தில் நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கக்கூடாது கிரிவல பாதையில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவல பாதையிலிருந்து 100 மீட்டர் உள்புறம் அன்னதானம் வழங்க வேண்டும்.
நோய் தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவோ மற்றும் வழங்கவோ அனுமதிக்கக்கூடாது வாழையிலையில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். பார்சல் செய்த உணவினை அன்னதானம் வழங்கக்கூடாது. உணவு பொருட்கள் தரமானதாகவும் தூய்மையானதாகவும் மற்றும் கலப்படமில்லாமலும் இருக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி அன்னதானம் வழங்கக்கூடாது.
உணவு கழிவு பொருட்களை போடுவதற்கான குப்பைத் தொட்டிகளை ஏற்பாடு செய்து அன்னதானம் அளிப்பவர்களே உணவு கழிவுகளை சேகரித்து அகற்றவேண்டும். அன்னதானம் வழங்குமிடத்தை சுத்தம் செய்துவிட்டு செல்ல வேண்டும். மேலும் போதிய வழிகாட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



