திருவண்ணாமலை, செப். 9 –
திருவண்ணாமலை ராஜராஜன் தெருவில் ஒரு தனியார் திருமண மகாலில் 23, 24 ஆகிய வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் கலெக்டர் க. தர்ப்பகராஜ் தலைமையில் இன்று நடந்தது. மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே. கம்பன், மூத்தோர் தடகள சங்க மாநில துணை தலைவர் ப. கார்த்திவேல் மாறன் ஆகியோர் முன்னிலை வகிக்க மாநகராட்சி ஆணையாளர் எஸ். செல்வபாலாஜி அனைவரையும் வரவேற்றார்.
இந்த முகாமில் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் க. தர்ப்பகராஜ் வழங்கி முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கான தீர்வுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் முகாமில் மாநகராட்சி, வருவாய்த்துறை சமூக நலத்துறை உள்ளிட்ட 13 துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி அரங்கு அமைத்து பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்றனர்.
இந்த முகாமில் தாசில்தார் சு. மோகனராமன், 23-வது வட்ட மாமன்ற உறுப்பினர் திலகம் ராஜாமணி, வட்ட செயலாளர் ஆர். ராஜாமணி 24-வது வட்ட செயலாளர் திவாகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



