வேலூர், ஆகஸ்ட் 12 –
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் வேலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பாக வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு குடிமைப் பொருள்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தினை நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் கலந்துகொண்டு துவக்கி வைத்து வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் வீடு தேடி குடிமை பொருள் வழங்கும் திட்டத்தில் திருவலம் பிரதான வீதியில் அமைந்துள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்.
பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துரைமுருகன் கூறியதாவது: பாலாறு மாசுபடுவதை தடுக்க உச்சநீதிமன்றம் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளதால் பாலாற்றில் கழிவுநீர் கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை தமிழக அரசு பின்பற்றும்” என்று கூறினார்.
தடுப்பணைகளை கட்டுவதற்கு 2000 கோடி நிதி ஒதுக்கியும் கட்டப்படவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு கூறியுள்ளதே எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இது தொடர்பாக நீண்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பார்க்கவில்லையா? ஏன் உங்களுக்கு தெரியாதா” என்று கூறினார்.
காட்பாடி அருகே மகிமண்டலம் பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு பொதுமக்கள் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று கூறினார். திமுக அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருவதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதிமுக ஆட்சியில் தான் ஒரு ஏரிகள் கூட தூர்வாரவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் பல ஏரிகள் தூர் வாரப்பட்டுள்ளது” என்று கூறினார்.
திருமாவளவன் எம்ஜிஆர் குறித்து பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, “நான் அதை பார்க்கவும் இல்லை படிக்கவும் இல்லை” என கூறினார்.



