திருப்புவனம், செப். 22 –
திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். குறிப்பாக இங்குள்ள வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷம் என கருதப்படுகிறது.
ராமேஸ்வரத்தை காட்டிலும் திருப்புவனத்தில் (திதி) கொடுப்பது மிகவும் விசேஷமாக இருக்கும் என்று விவரம் அறிந்தவர்களால் சொல்லப்படுவதால் மதுரை, விருதுநகர், சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக தை, ஆடி, புரட்டாசி ஆகிய மகாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க வருவதுண்டு. அந்த வகையில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 5:00 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றங்கரையில் குவிந்தனர். இதற்கு முன்னேற்பாடாக கொட்டகை அமைக்கப்பட்டு பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
சிவகங்கை மாவட்ட பாசன தேவைக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் ஓரளவிற்கு நீரோட்டம் இருந்தது. பக்தர்கள் ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பண பொருட்களை கரைத்து வழிபட்ட பின் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் விளக்கேற்றி வழிபட்டனர். ஆற்றில் நீரோட்டம் இருந்ததால் தேரோடும் வீதியில் கொட்டகை அமைத்து வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு வெயில் இன்றி கொட்டகைகள் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் மீட்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருப்புவனம் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மேற்பார்வையில் நிலைய போலீசார் வாகன ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டனர்.



