சிவகங்கை, செப். 13 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள கொந்தகை, கீழடி, நெல்முடிக்கரை, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து ஆயிரக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களோடு சேர்ந்த ஒரு சில மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் உள்ள தண்ணீரில் மிதந்தது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவைப் பிரிவில் எட்டுப் பேரிடம் விசாரணை செய்யப்பட்டது.
இந்த விசாரணையின் முடிவில் வரைபடம் வரையும் மதுரை வண்டியூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற பணியாளரை போலீசார் தற்போது கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் இவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரக் காரணம் சிசிடிவி ஆதாரங்கள்தான் எனவும், பணியாளர்களுக்குள் உள்ள மோதல்கள் தான் எனவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருவதாக கூறப்படுகிறது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரத்தில் ஏற்கனவே சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தில் செய்தித் துறையின் மூலம் வெளியிட்ட தகவல்களில் வெவ்வேறு விதமான முரண்பட்ட தகவல்கள் வெளியாகி இருப்பதால் இந்த விஷயங்களில் நமது நாளிதழில் செய்தி வெளியிடுவதில் அமைதியாக உற்று நோக்க வேண்டியுள்ளது.


