நாகர்கோவில், ஜூன் 16 –
நாகர்கோவில் அப்டா மார்க்கெட் முதல் காவல் கிணறு சந்திப்பு வரை நான்கு வழிச் சாலை தற்போது செயல்பாட்டில் உள்ளது. இதில் திருப்பதிசாரத்தில் டோல்கேட் அமைந்து வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (14ம் தேதி) காலை 7:30 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து காரில் சென்ற விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் டோல்கேட்டில் 1-ம் நம்பர் பூத் வழியாக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த பணியாளர் 1-ம் நம்பர் பூத் சர்வர் இயங்கவில்லை. எனவே 2-ம் நம்பர் பூத் வழியாக வாருங்கள் எனக் கூறியுள்ளார். இதில் அங்கிருந்த ஊழியர் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் டவுண் ரயில்வே நகர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (21) என்பவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விடுதலை சிறுத்தை கட்சியினர் டோல்கேட் ஊழியர் ஆகாஷை ஆபாசமாகப் பேசி பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி பூத் 2-ல் போடப்பட்டு இருந்த பேரிகார்டை அடித்து சேதப்படுத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஆகாஷ் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்டச் செயலாளர் லியாகத் அலி, மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் செல்வி மற்றும் நிர்வாகிகள் ரெஜி என்ற கருப்பு ரெஜி, ஆல்வின் ஜோஸ், சுபாஷ் மற்றும் கண்டால் தெரியும் சிலர் மீது பி.என்.எஸ். பிரிவு 189 (2), 126 (2), 296 (பி), 324 (4), 351 (2) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.