சங்கரன்கோயில், ஆகஸ்ட் 11 –
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருவிகுளம் மேற்கு ஒன்றியம் சுப்புலாபுரம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் திமுக தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார்.
மாநில மருத்துவ அணி துணை செயலாளர் செண்பக விநாயகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜதுரை, மனோகரன், புனிதா, ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், கிறிஸ்டோபர், கடற்கரை முன்னிலை வகித்தனர். குருவிகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சேர்மத்துரை வரவேற்புரை நிகழ்த்தினர். சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக வக்கீல் அணி மாநில துணை அமைப்பாளர் கழக பேச்சாளர் சூர்யா வெற்றி கொண்டான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது: தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து வரும் பாஜகவோடு கூட்டணி வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி துரோகம் இழைத்து விட்டார். அதிமுக என்ற கட்சியை பாஜகவிடம் அடகு வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. முன்னாள் முதல்வர் கலைஞர் இறந்தபோது அப்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மெரினாவில் கலைஞருக்கு இடம் கொடுக்கவில்லை. திமுக சட்டப்படி போராடி கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுத்தது. தமிழ்நாட்டில் திராவிட மாடல் முதல்வர் செய்து வரும் திட்டங்களால் தமிழ்நாடு இன்று இந்தியாவில் முதல் மாநிலமாக திகழ்வதை எடப்பாடி பழனிச்சாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
தற்போது மக்களை சந்திக்கிறேன் எனக்கூறி பேசுவதற்கு ஒன்றும் இல்லாததால் என்ன பேசுவது என்று தெரியாமலே பேசி வருகின்றார். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னாள் முதல்வர்கள் படங்கள் பெயர்கள் எதிலும் இருக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதிமுக கட்சி ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் பெயர்களும் அதில் அடங்கும். இப்படி மொத்தமாக அதிமுகவை அழித்துவிட்டு பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்துள்ளனர். இந்த வழக்கிற்காக தான் ஆஜராகி இந்த வழக்கு போட்ட முன்னாள் அமைச்சர் சண்முகத்திற்கு ரூபாய் பத்து லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பை பெற்றுத்தந்தேன் எனவும், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் எனவும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் ராஜாவிற்காக நெசவாளர் அதிகமாக உள்ள பகுதிகளில் தானே நேரில் வந்து பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறினார்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, அன்புக்கரசு, பொதுக்குழு உறுப்பினர் பராசக்தி, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், பேரூர் கழகச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி அய்யலுசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் சிவசுப்பிரமணியன், ரஜினிகாந்த், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



