திண்டுக்கல், ஆக. 15 –
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் நூறாவது பள்ளி ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு வருகை புரிந்தவர்களை உதவி தலைமை ஆசிரியர் மரியலூயிஸ் சேகர் வரவேற்றார். புனித மரியன்னை கலைமனைகளின் அதிபர் அருள் பணி மரிவளன், சே.ச., தலைமை ஏற்க திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ( இடைநிலை) நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை வி ஆர் எஸ் லெதர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், முன்னாள் மாணவருமான எ கே ஸ் ரொட்டேரியன் ராஜா சீனிவாசன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று கல்வியில் சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, மாணவர்களுக்கு மதிப்பீடுகளைப் பற்றிய சிறப்புரையாற்றினார். புனித மரியன்னை பள்ளியின் முன்னாள் மாணவ இயக்க மூத்த முதன்மை பிரபலர் எஸ் கே சி குப்புசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுச் சிறப்பித்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் பணி ஸ்டீபன் லூர்து பிரகாசம், சே. ச., ஆங்கில வழி கல்வி இயக்குனர் அருள் பணி தெரஸ் நாதன் சே. ச., கூடுதல் உதவி தலைமை ஆசிரியர் பெரர் நோயல் ராஜ் ஆகியோர் 2024 – 2025 ஆம் கல்வியாண்டு ஆண்டறிக்கையை சமர்ப்பித்தனர். விழாவில் மாணவர்கள் பங்கேற்ற பல்சுவை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாணவர்கள் மோகன் வேல், தீக்ஷித் முகமது ஆதில், ஷாஹித் அப்ரிடி ஆகியோர் தொகுத்து வழங்க ஆசிரியர் அலுவலக செயலர் ஜேம்ஸ் பால்ராஜ் நன்றி கூறி நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.



