நாகர்கோவில், செப். 23 –
குமரி மாவட்ட வேளாண்மைத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் குருந்தன்கோடு (இருப்பு திங்கள்நகர்) நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா இன்று (23.09.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: குமரி மாவட்டத்தில் வேளாண்மை துறையின் கீழ் கிருஷ்ணன்கோவில், பறக்கை, புத்தளம், தேரூர், செண்பகராமன்புதூர், தாழக்குடி, திட்டுவிளை, சிறமடம், கடுக்கரை, திங்கள்நகர் ஆகிய 10 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக நேற்று குருந்தன்கோடு (திங்கள்நகர்) நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நெல்கொள்முதல் நிலையத்தில் சாக்குகளின் இருப்பு மற்றும் பாரமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கொள்முதல் நிலையத்தை சுற்றிலும் சுகாதாரநிலை பேணப்பட வேண்டும் என்றும், அருகிலுள்ள வீடுகளுக்கு கொள்முதல் நிலையத்திலுள்ள தூசி துரும்புகள் செல்லாதவாறு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து நெல் கொள்முதல் விலையில் அதிக லாபம் பெறுவதற்கு விவசாயிகள் குருந்தன்கோடு (திங்கள்நகர்) நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்திட வேண்டும். அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.



