ராமநாதபுரம், ஜுலை 4 –
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக விவசாயத் தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரைய தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது.
நிலமற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின் திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் 5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிலங்களுக்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டினத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத் தொகை போக எஞ்சிய கிரய தொகையினை தேசிய பட்டியல் இனத்தோர் நிதி மேம்பாட்டு கழக நிதியிலிருந்து பயனாளிகளுக்கு ஆறு சதவீதம் மிகக் குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலமாக கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்டம் மேலாளர் அலுவலகத்தை அணுகி விபரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.