நாகர்கோவில், டிச. 17 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வுப் பேரணி நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா கொடியசைந்து துவக்கி வைத்து பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் இன்று 17ம் தேதி முதல் வருகிற 26ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் கல்லுாரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவக்கி வைக்கப்பட்டது.
இப்பேரணியானது முக்கிய சாலை வழியாக சென்று மகளிர் கிறிஸ்தவக்கல்லூரியில் முடிவடைந்தது. இப்பேரணியில் மகளிர் கிறிஸ்தவக்கல்லூரி, தெ.தி.இந்து கல்லூரி
தொடர்ந்து ஆட்சிமொழிச் சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வார விழா தொடர்பான நிகழ்வின் ஒருபகுதியாக தமிழ் அமைப்புகள், நிர்வாகிகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் நாளை 18ம் தேதி பேராசிரியர்கள் தலைமையில் அரசுப்பணியாளர்களுக்கு ஆட்சிமொழி மின்காட்சியுரை வகுப்பும், 19.12.2025 அன்று அரசு பணியாளர்களுக்கு தமிழில் வரைவுகள் குறிப்பு எழுதல் குறித்த பயிற்சி வகுப்பும், 22.12.2025 அன்று ஆட்சிமொழிப் பட்டிமன்றமும், 23.12.2025 அன்று கணினித்தமிழ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் கணினித்தமிழ் ஒருங்குறி பயன்பாடுகள் குறித்து அரசுப்பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பும், 26.12.2025 அன்று தொழிலாளர் துறை, வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் இணைந்து வணிக நிறுவனங்களின் தமிழில் பெயர்ப்பலகை அமைத்திட வலியுறுத்தி கலந்தாய்வுக் கூட்டமும் நடைபெறவுள்ளன. இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் போதுமணி, தமிழறிஞர்கள் தமிழ்க்குழவி, தமிழ் வானம் சுரேஷ், கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



