சென்னை, செப். 23 –
சென்னை தி. நகர் உஸ்மான் சாலையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் வளாகத்தில் தென் சென்னை மாவட்ட தீயணைப்பு மற்றும் பொது பாதுகாப்பு சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
இந்த ஒத்திகை பயிற்சிக்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் இயக்குனர் சீமா அகர்வால் ஐபிஎஸ், இணை இயக்குனர் சத்ய நாராயணன், தென்சென்னை மாவட்ட தீயணைப்பு அதிகாரி ஆர்னிஷா பிரியதர்ஷினி, புறநகர் மாவட்ட தீயணைப்பு அதிகாரி லோகநாதன், தி சென்னை சில்க்ஸ் டிஜிஎம் ராஜன், ஏ ஜி எம் வேலுமணி, வேல்முருகன், நிர்வாக அதிகாரி மணவாளன் ஆகியோர் முன்னிலையில் எதிர்பாராத விதமாக மக்கள் அதிகம் கூடுகின்ற உயரமான கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றி நேரடியாக செயல்முறை ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.
அப்போது உயரமான கட்டிடத்தில் ஆபத்தில் இருக்கும் மக்களை மீட்பதும், ஆபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்டு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது பற்றிய ஒத்திகை நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது. இந்த ஒத்திகையை தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த 10 தீயணைப்பு நிலைய அலுவலர்கள், 50 தீயணைப்பு வீரர்கள், என்சிசியில் உள்ள 10 மாணவர்கள் தன்னார்வலர்களாக கலந்து கொண்டு ஒத்திகை பயிற்சியினை செய்து காட்டினர்.
இந்த ஒத்திகை பயிற்சியினை கடை ஊழியர்கள், அப்பகுதி பொதுமக்கள் நேரில் கண்டு தெரிந்து கொண்டனர். இது போன்ற நிகழ்ச்சி பொது வெளியில் நடப்பது அனைவருக்கும் பயன் அளிப்பதாக அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.



