போகலூர், செப். 8 –
தமிழ்நாடு ஊரகவளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட தலைவருமான முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கடந்த 23.08.2025 ம் தேதி ஒரு லட்சம் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் கலந்து கொண்ட கோரிக்கை மாநாடு திருச்சியில் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான் போஸ்கோ பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 16 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இதில் தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூபாய் 10000 ஊதியம் ஊராட்சி மூலம் வழங்க வேண்டும், வட்டார மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு வட்டார மாவட்ட அளவில் பணி நிரந்தரம் செய்திட வேண்டும், சுகாதார ஊக்குநர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கி மாதம் ரூ. 10000 வழங்கிட வேண்டும், மக்கள் நல பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடிநீர் ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், MGNREGS திட்ட கணினி உதவியாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும், ஊராட்சி செயலாளர்களை பென்சன் திட்டத்தில் இணைக்க வேண்டும், ஊராட்சி கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து மூன்றுகட்ட இயக்க நடவடிக்கை நடத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக செப்டம்பர் 24-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் 1000 பணியாளர்கள் கலந்துகொள்ளும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பணியாளர்களும் திரளாக கலந்துகொள்ள வேண்டும். மேலும் அவர் கூறும்போது தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விசயத்தில் சிறப்பு கவனம் எடுத்து அரசாணைகள் வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


