தஞ்சாவூர், ஜூன் 19 –
தமிழகத்தில் புதிய மினி பஸ் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தஞ்சையில் அரசு விழாவில் புதிய விரிவான மினி பஸ் 2024 படி புதிய மினி பஸ் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த 1997 ஆம் ஆண்டு பஸ் வசதி பெறாத குக்கிராமங்களில் வாழும் மக்கள் பஸ் வசதி பெறும் நோக்கில் மினி பஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி மாவட்டத்திற்கு 250 மினி பஸ் அனுமதிச் சீட்டுகள் என்ற அடிப்படையில் பஸ்கள் இயக்கப்படாத வழித்தடத்தில் 16 கி.மீ. மற்றும் பஸ்கள் இயக்கப்படும் வழித்தடத் தில் 4 கி.மீ. என மொத்தம் 20 கி.மீ. என்ற அளவில் வழித்தடம் நீட்டிப்பு செய்து மினி பஸ் இயக்கப்பட்டு வந்தன. இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் திட்டத்தை விரிவாகவும், முறையாகவும் நடைமுறைப்படுத்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் துறை சார்ந்த பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அரசால் ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய விரிவான மினி பஸ் திட்டம் 2024 கடந்த 23.1.2025 அன்று வெளியிடப்பட்டது. பின்னர் மீண்டும் இந்த திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 28.4.2025 அன்று வெளியிடப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட குக்கிராமங்களை நகரப் பகுதிகளுடன் இணைக்கும் விதமாக அதிகபட்ச வழித்தடதூரத்தை 25 கி.மீ. ஆக உயர்த்தி நீட்டிப்பு செய்து அதில் பஸ் இயங்காத வழித்தடங்களில் குறைந்தபட்சம் 65 சதவீதம் என இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது மினி பஸ் இயக்கி வருபவர்கள் புதிய திட்டத்திற்கு மாற்றம் பெற்று இயக்கிடவும் பலவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டி ல் 2,094 புதிய வழித்தடங்கள் மற்றும் புதிய திட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்ட 1,009 வழித்தடங்கள் என மொத்தம் 3,103 வழித்தடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டுமக்களுக்கு பஸ் இயக்கப்படாத 25,708 கி.மீ நீளத்திற்கு புதிதாக பஸ் வசதி கிடைக்கப்பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், கோவி. செழியன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்பிக்கள் திருச்சி சிவா, கல்யாண சுந்தரம், முரசொலி, எம்எல்ஏக்கள் டி.கே.ஜி நில மேகம், அசோக்குமார், துரை. சந்திரசேகரன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் சுன் சோங்கம் ஜ டக்சிரு, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.