கன்னியாகுமரி, ஆக.24.
கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் சந்திப்பில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பொதுக் கழிப்பிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தடிக்காரன்கோணம் ஊராட்சியில் சுமார் 6,000 பேர் வசித்து வரும் நிலையில், இங்கு பள்ளி, கல்லூரி, அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம், சந்தை உள்ளிட்ட முக்கிய இடங்கள் அமைந்துள்ளன.
தினமும் 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லும் இந்த சந்திப்பில், பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பொதுக் கழிப்பிடம் இல்லாததால் மக்கள் நீண்ட காலமாக சிரமங்களை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த சமூக சேவகர் ஜெயப்பிரதாப் சிங் முயற்சியால், பொதுக் கழிப்பிடம் அமைக்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இடையில் சில காரணங்களால் பணி நிறுத்தப்பட்ட நிலையில், பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு மீண்டும் பொதுமக்கள் முன்னிலையில் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், பணிகளை விரைவாகவும் தடையின்றியும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை மீட்டு இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.



