தஞ்சாவூர், அக்டோபர் 9 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், ஒரத்தநாடு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணி – கழக சார்பில் நெல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு ரெயில்களில் ஏற்றி அனுப்பும் பணி நடைபெறுவதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள் முதல் நிலையத்துக்கு நேரில் சென்று விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் குறித்த ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கட்டப்படும் பொது விநியோகத் திட்ட அங்காடி கட்டிட கட்டுமான பணிகளையும், தென்னமநாடு ஊராட்சியில் கட்டப்படும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட கட்டுமான பணிகள், பொது விநியோகத்திற்கு அங்காடி கட்டிட கட்டுமான பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் ஈச்சங்கோட்டை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பணிகள், மண்புழு உரம் தயாரித்தல், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மரக்கன்று உற்பத்தி, வினியோகம் செய்யும் பணி நடைபெறுவதையும், உயர்நிலை நீர்தேக்க தொட்டி தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? எனவும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தலைமை அலுவலக மாவட்ட வருவாய் அலுவலரும், பொதுமேலாளருமான (சந்தை) முத்துராமலிங்கம், முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், துணை மேலாளர் (கொள்முதல் மற்றும் இயக்கம்) இளங்கோ, ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் மற்றும் பலர் இருந்தனர்.



