தஞ்சாவூர், செப்டம்பர் 16 –
தஞ்சாவூர் மாவட்டத்தில்அன்பு கரங்கள் திட்டத்தில் 457 பேர் பயன் பெறுவர் என்றார் உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன். சென்னையில் இருந்து தமிழக முதல்வர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் அன்பு கரங்கள் திட்டத்தை காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து தஞ்சாவூரில் பயனாளிகளுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் அடையாள அட்டைகளை வழங்கி தெரிவித்தாவது: தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியாக பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளி படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூபாய் 2000 உதவித்தொகை வழங்கும் அன்பு கரங்கள் என்ற மகத்தான திட்டத்தை தமிழகம் முதல்வர் தொடங்கி வைத்தார்.
பெற்றோரை இழந்து உறவினர்கள் ஆதரவில் வாழும் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற வாழ்வாதார தேவைகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 2000 வழங்கும் அன்பு கரங்கள் திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 457 குழந்தைகள் பயன் பெறுவர் என்றார் அமைச்சர்.
இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் ( திருவையாறு), டி கே ஜி நீலமேகம் (தஞ்சாவூர்), மேயர்கள் சண் ராமநாதன் (தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்), தஞ்சாவூர் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, வருவாய் கோட்டாட்சியர் நித்யா, முதன்மை கல்வி அலுவலர் மாதவன், பாதுகாப்பு அலுவலர்கள் அசோக், ரஞ்சித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



