தஞ்சாவூர், ஜுன் 24 –
தஞ்சாவூரில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் கலை மாமணி மருத்துவர் நரேந்திரன் எழுதிய அறியப்படாத மொழி இயக்கங்களும், மொழிப் போராட்டங்களும் என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சரசுவதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதர் மணி மாறன் தலைமை வகித்தார். மருத்துவர் மருது துரை முன்னிலை வகித்தார். தமிழ் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் தலைவர் காமராசு அறியப்படாத மொழி இயக்கங்களும் மொழி போராட்டங்களும் என்ற நூலை பற்றிய அறிமுகவுரையாற்றினார்.
நூலாசிரியரும், மக்கள் சிந்தனை பேரவை அறிவியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான கலைமாமணி மருத்துவர் நரேந்திரன் ஏற்புரையாற்றினார்.
முன்னதாக மக்கள் சிந்தனைப் பேரவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விஜயராமலிங்கம் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளர் பாலசுப்ரமணி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழ் தேசிய பேரியக்கத்தலைவர் மணியரசன் தமிழ் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பதிவாளர் அரங்கன், ஓய்வு பெற்ற உதவி பதிவாளர் ஜம்புலிங்கம், உலக திருக்குறள் பேரவைச் செயலர் பழ மாறவர்மன், ஓய்வு பெற்ற வேளாண்மை துறை அதிகாரி பழனியப்பன், திராவிடர் கழகம் அய்யனார்,காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் மணிமொழியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.