தஞ்சாவூர், ஆகஸ்ட் 26 –
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 432 மனுக்கள் பொதுமக்கள் அளித்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் பேராவூரணி வட்டம் முடப்புளிகாடு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஹரி என்பவருக்கு கல்வி உதவி தொகைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூபாய் 50,000 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் முற்றோதல் திறனாய்வுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை மற்றும் செய்தி துறை அமைச்சர் அவர்களால் பாராட்டப்பட்டு சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கியதை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை கலெக்டர் மணிமாறன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், பிற்பட்டோர் நல அலுவலர் ஸ்ரீதர், தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சபீர் பானு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



