தஞ்சாவூர், செப்டம்பர் 27 –
தஞ்சாவூர் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் 50-வது வருடாந்திர பங்குதாரர்களின் பேரவை கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அண்ணா சர்க்கரை ஆலை நிறுமச் செயலாளர் சங்கரலிங்கம் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு சர்க்கரை கழக மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார் மாவட்டகலெக்டர் பிரியங்கா பங்கஜம் முன்னிலை வகித்தார். தமிழக கவர்னரின் பிரதிநிதி பாலமுருகன் கலந்து கொண்டு தீர்மானங்களை வழிமொழித்தார்.
ஆலையின் தலைமை நிர்வாகி இராமன் ஆலையின் செயல்பாடுகள் குறித்தும், அண்ணா சர்க்கரை ஆலை மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளால் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியத் திட்டங்கள் மற்றும் ஆலையின் நடப்பு நடவு மற்றும் அரவை பருவத்திற்கான செயல்பாடு திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம் அளித்தார். தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் சர்க்கரை கழக மேலாண் இயக்குனர் மற்றும் தலைவர் அன்பழகன் பேசியதாவது: மத்திய அரசு கரும்புக்கு டன்னுக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலையாக ரூபாய் 3,151 அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக இதுவரை இல்லாத அளவுக்கு டன்னுக்கு ரூபாய் 349 உயர்த்தி அறிவித்து வழங்கி உள்ளது. குறுகிய கால பயிர் போன்ற மாற்று பயிர்களுக்கு செல்வதை தடுத்து கரும்பு சாகுபடியை ஊக்கப்படுத்துவதற்காக இந்த தொகை வழங்கப்படுகிறது.
கரும்பு டன்னுக்கு ரூபாய் 3,500 வழங்கப்பட்டாலும் வெளிச் சந்தையில் சர்க்கரை விலை டன்னுக்கு ரூபாய் 423 மட்டுமே விற்பனையாகிறது. ஒரு டன் சர்க்கரை உற்பத்தி செய்ய ரூபாய் 851 செலவாகிறது. அதாவது ஒரு கிலோ சர்க்கரை உற்பத்தி செய்ய ரூபாய் 80.51 செலவிடும் நிலையில் வெளிச்சந்தையில் ரூபாய் 40.23 மட்டுமே விலை கிடைப்பதால் ஏறத்தாழ ரூபாய் 40 இழப்பு ஏற்படுகிறது.
ரூபாய் 40 இழப்பை அரசு ஈடு செய்வதால் தான் ஆலைகளை தொடர்ந்து இயக்க முடிகிறது. இதன் மூலம் விவசாயிகளின் நலனும் பாதுகாக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு இடுபொருள்களின் விலை உயர்ந்து விட்டதால் கரும்புக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றாலும், இந்த விலை கட்டுப் படியாகவில்லை என்றும், டன்னுக்கு ரூபாய் 5,000 உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுப்பது நியாயமானது. இவ்வாறு அவர் கூறினார்
கூட்டத்தில் இயக்குனர்கள், தமிழ்நாடு சர்க்கரை கழக பொது மேலாளர் மாலதி மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய மேலாண்மை இயக்குனர் ரமணிதேவி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் சங்கர லட்சுமி, புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் மற்றும் அலுவலர்கள், பங்குதாரர்கள், கரும்பு விவசாய சங்க பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கரும்பு பெருக்கு அலுவலர் காளிமுத்து நன்றி கூறினார்.



