தஞ்சாவூர், ஜூன் 9 –
தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் ‘எனக்கல்ல உனக்காக’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழாவில் உலகத் திருக்குறள் பேரவைச் செயலாளர் பழ.மாறவர்மன் அனைவரையும் வரவேற்றார். சதய விழாத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். வீரராகவா மேல்நிலைப்பள்ளித் தாளாளர் தனசேகரன் வாண்டையார் ‘எனக்கல்ல உனக்காக’ நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். நூலாசிரியரை அறிமுகம் செய்த தமிழ்ச்செல்வன், நூலை அறிமுகம் செய்து திருவையாறு அரசர் கல்லூரி முன்னாள் முதல்வர் சண்முக செல்வகணபதி உரையாற்றினார். காரைக்கால் விநாயகா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் குணசேகரன், டாக்டர் ராதிகா மைக்கேல், நகைச்சுவை மாமன்ற செயலர் ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். நூலினைப் பெற்றுக் கொண்டவர்கள் சார்பில் ந.மு.வே.நாட்டார் கல்லூரி செயலர் கலியபெருமாள், தென்னங்குடி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். ‘எனக்கல்ல உனக்காக’ நூலாசிரியர் நல்லாசிரியர் சதாசிவம் ஏற்புரையாற்றினார். மாணிக்கம் பிரிண்டர்ஸ் அருண்குமார், அபிராமி அருண்குமாருக்குப் பொன்னாடை அணிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். நிறைவாகக் கல்பனா பாஸ்கர் நன்றியுரை ஆற்றினார்.