தஞ்சாவூர், ஜூன் 23 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உயர் கல்விசேர்க்கைக்கு வழிகாட்டும் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். முகாமில் 75க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 30 மாணவர்கள் வங்கி கடன் பெறுவதில் ஏற்படும் பிரச்சனைகளைக் களைவது குறித்தும் 45 மாணவர்கள் எந்த கல்லூரி சேர்வது எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்பது குறித்தும் கேட்டறிந்தனர். இதுபோன்ற முகாம்களை உயர் கல்வி சேர விருப்பமுள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட முன்னோடி வங்கிகளின் மேலாளர் பிரதீப் கண்ணன், உதவி கலெக்டர் (பயிற்சி) கார்த்திக் ராஜா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.