தக்கலை, ஜூலை 31 –
பத்மநாபபுரம் சன்னதி தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (29). லேத் பட்டறை தொழிலாளி. இவருக்கும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சேர்ந்த ஜனனி ஸ்ரீ (21) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறி இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஜனனிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து உள்ளனர். அப்போது அவர் தனது காதலை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 27-ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி ஸ்ரீ பஸ்சில் தக்கலை வந்துள்ளார். பின்னர் தனது காதலன் விக்னேஷுக்கு போன் செய்து தான் வீட்டை விட்டு வெளியேறி தக்கலை வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து விக்னேஷ் காதலியை அழைத்து 28-ம் தேதி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மறுநாள் காதல் ஜோடி தக்கலை போலீஸ் நிலையத்தில் வந்து சரணடைந்தனர். அப்போது அவர்கள் ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள ஒரு இந்து கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் அதனை பதிவு செய்ய இருப்பதாகவும், இதற்கு பெண் குடும்பத்தினர் எதிர்ப்பு இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் போலீசில் கூறினார்கள்.
இவரை தொடர்ந்து இரு குடும்பத்தினருக்கும் போலீசார் தகவல் தெரிவித்து போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. பெண்ணின் குடும்பத்தினர் காதல் திருமணத்தை ஏற்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பெண்ணை விக்னேஷ் உடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.