சங்கரன்கோவில், ஆகஸ்ட் 21 –
சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரிய சேர்மன் ராதாகிருஷ்ணன். இவரை சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
மனுவில் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம் குருக்கள்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின்சார விநியோகம் மலையான் குளம் கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வந்தது. இதனால் பல நேரங்களில் குறிப்பாக பேரிடர் காலங்களில் மின் தட்டுப்பாடு. கடந்த 15 ஆண்டுகளாக குருக்கள்பட்டி பகுதியில் துணை மின் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று அப்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் பலமுறை மனு அளித்தும் அது குறித்து எந்த வித முயற்சியும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஒன்றிய செயலாளர் பெரியதுரை மற்றும் பொதுமக்கள் குருக்கள்பட்டி கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். இது குறித்து ராஜா எம்எல்ஏ உடனடியாக நடவடிக்கை எடுத்த நிலையில் மின்வாரியம் மூலம் துணை மின் நிலையம் அமைக்க முதல் கட்டமாக தனியாரிடமிருந்து இடம் வாங்கப்பட்டது. தற்போது துணை மின் நிலையம் அமைக்க சுமார் 4.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது நிதி ஒதுக்கப்பட்டும் துணை மின் நிலையம் அமைக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தமிழ்நாடு மின் வாரிய சேர்மன் ராதாகிருஷ்ணனிடம் குருக்கள்பட்டி, வீரசிகாமணி, குருவிகுளம் ஆகிய பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைத்து தர வேண்டும் எனவும், குருக்கள்பட்டியில் துணை மின் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கியும் அந்தத் திட்டம் துவங்காமல் உள்ளதால் அதை உடனடியாக துவக்க வேண்டும் எனவும், இதனால் குருக்கள்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் விவசாயிகள் ஆகியோர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும் என்று கோரிக்கை மனு அளித்தார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட மின்வாரிய சேர்மன் ராதாகிருஷ்ணன் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து குருக்கள் பட்டியில் உடனடியாக துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கும் எனவும், வீரசிகாமணி மற்றும் குருவிகுளம் பகுதிகளில் துணை மின் நிலையங்கள் மற்றும் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்க எடுக்கப்படும் என தெரிவித்தார். பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட உள்ளதால் பொதுமக்கள் முதல்வர், அமைச்சர் மற்றும் ராஜா எம்எல்ஏ-விற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.



