சென்னை, செப். 01,
சென்னையில் டேக்வோ டா தற்காப்புக் கலையின் தேசிய அளவிலான 2 நாள் போட்டிக்கான துவக்க விழா சென்னை மயிலாப்பூர் சாந்தோம் மான்ட்ஃபோர்டு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இத்துவக்கவிழாவில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு டேக்வோ டா போட்டியினை தொடங்கி வைத்தார். உடன் மாமன்ற உறுப்பினர் ரேவதி, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியத் தலைவர் தங்கம், ஐ.டி.ஃப் அகில இந்திய கூட்டமைப்பின் தலைவர் இராஜேந்திர பாலாஜி, கூட்டமைப்பின் துணைத்தலைவர்கள் அப்துல் ரஹ்மான், நரேந்திசிங் ராவத், இணைச் செயலாளார் ரச்சனா சவுராசிய ராஜேந்திரன், தமிழ்நாடு ஐ.டி.எஃப் கூட்டமைப்பின் தலைவர் பிரதீப், தமிழ்நாடு ஐ.டி.எஃப் பொதுச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு டேக்வோ டோ (டி.என்.ஐ.டி.எஃப்) கூட்டமைப்பின் தலைவரும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: டேக்வோ டா என்பது வட கொரியா இராணுவத் தற்காப்பு கலையாகும். இத்தற்காப்பு கலைக்கான போட்டி கடந்த 1986 ஆண்டு சென்னையில் நடைபெற்றது. மீண்டும் பல ஆண்டுகள் கழிந்து இந்த ஆண்டு (2025) சென்னையில் டேக்வோ டா தற்காப்பு கலை போட்டிகள் நடைபெறுகிறது.
சிறுவயதிலிருந்தே இந்த கலையை பயில்வதால் மாணவர்கள் நற்சிந்தனை, நல்லொழுக்கத்துடன் திகழ்வார்கள். தவறான சிந்தனைகள் தவிர்க்கப்படும். இந்த தேசிய அளவிலான போட்டியில் 12 மாநிலங்களிலிருந்து சுமார் 1000 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 65 பேர் கலந்துகொள்கிறார்கள். இதில் தமிழ்நாடு டைப்-1 மற்றும் தேசிய அளவிலான டேக்வோ டா போட்டிகளும் தனித்தனியாக நடைபெறுகிறது என்றார்.



