சுசீந்திரம், ஜூன் 23 –
சுசீந்திரம் தாணுமாலையன் நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் மதுசூதனப்பெருமாள் (76). இவர் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரும் இவருடைய மனைவி அருணா (68) ஆகியோர் பெங்களூரில் இருக்கும் மகனை பார்ப்பதற்காக கடந்த மாதம் 15 ஆம் தேதி (15-5-2025) அன்று வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் கேட் சாவியை நண்பர் மதுசூதனன் என்பவரிடம் கொடுத்துவிட்டு சென்றார். அவருடைய நண்பர் 18-6-2025-ம் தேதி இரவு 8 மணிக்கு சென்று காரை நிறுத்திவிட்டு கேட்டை பூட்டி மறுநாள் 19-6- 2025 -ம் தேதி காலை 10 மணிக்கு வந்து பார்க்கும்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உடனே பெங்களூரில் இருந்த மதுசூதனப்பெருமாளுக்கு போனில் தகவல் தெரிவித்தார். மதுசூதனப்பெருமாள் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் எடை கொண்ட தங்க ஒட்டியானை செயின் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மதுசூதனப்பெருமாள் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.