சிவகங்கை, செப். 27 –
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் சரியான தீர்வுகளை மாவட்ட ஆட்சியர் கூறியதால் விவசாயிகள் கைதட்டி மகிழ்ந்தனர்.
அப்போது விவசாயிகள் பேசும்போது: விவசாயப் பகுதிகளுக்கு மானிய விலையில் உயிர்வேலி அமைத்துத் தர வேண்டும். பழக்கன்றுகள் வளர்க்கும் இடங்களுக்கு வலைகள் வழங்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் உற்பத்தியாகும் வாழைத்தார்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்க தோட்டக்கலைத்துறை அல்லது விவசாயத் துறையின் சார்பில் அவற்றை கொள்முதல் செய்ய வேண்டும். புல்லுக்கோட்டை கண்மாயின் வரத்து கால், மாரநாட்டு கண்மாயின் வரத்துக்கால்வாய்களை சரி செய்ய வேண்டும். பாப்பாங்குளம் கண்மாய், திருப்புவனம் அருகே உடையரேந்தல் கண்மாய் ஆகிய கண்மாய்களை தூர்வார வேண்டும்.
தெற்கு மாரந்தை கண்மாயின் வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து பண்ணைக் குட்டை அமைத்திருப்பதை அகற்ற வேண்டும். குடியுரிமை பட்டா பெறாதவர்களுக்கு தாமதிக்காமல் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் உடனுக்குடன் தீர்வு கூறினார். போக்குவரத்துத் துறையில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பொது மேலாளரை வர வைத்து தனிக் கூட்டம் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார் .



