நல்லூர், டிசம்பர் 11 –
ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பூவன்குடியிருப்பு – அத்திக்கடை சாலையோரத்தில் அமைந்துள்ள சம்பை குளமானது சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இக்குளமானது பூவன்குடியிருப்பு, அத்திக்கடை, பொட்டல் விலக்கு, கார்த்திகைவடலி, பழவிளை மறுகால்தலை விளை உட்பட சுற்றுவட்டார பகுதிகளின் மக்களுக்கு நீர்த் தேவையை பூர்த்தி செய்து வருவதுடன், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
இந்த குளத்தில் இருந்து மறுகால் சானல் வழியாக திறந்து விடப்படும் நீரானது சுண்டபற்றிவிளை, தேரிமேல் விளை, கொய்யன் விளை,பெரியவிளை, ஈத்தாமொழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தென்னை, வாழை பயிரிடப்பட்டுள்ள விளை நிலங்களுக்கு மிகவும் முக்கியமான நீர் ஆதாரமாக காணப்படுகிறது. இதனால் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் மேம்படுவதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் வழிவகை செய்கிறது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரபடாமல்,சரிவர பராமரிப்பு செய்யபடாததால் குளத்தில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவு குறைவதுடன், குளம் முழுவதும் ஆகாயத்தாமரை பரவி தற்போது குளமே தெரியாத நிலை உருவாகியுள்ளது.முழுக் குளமும் பசுமை பாய்ச்சலாக மாற்றமடைந்ததால் நீர்மட்டம் காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால் மறுகால் செல்லும் நீரானது தடை ஏற்பட்டு நீரோட்டம் குறைந்து, விவசாய நிலங்களுக்கு நீர் சென்றடையாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் சாலை ஓரத்தில் அமைந்துள்ள இந்தக் குளத்திற்கு பக்கவாட்டு தடுப்பசுவர் இல்லாததால் மழைக்காலங்களில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு, குளத்தில் நீர் தேக்கப்படும் அளவு குறைவதோடு, அருகில் செல்லும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, குளத்தின் பக்கவாட்டு தடுப்புசுவர் உடனடியாக அமைத்து,குளத்தில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்ற அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



