சங்கரன்கோவில், செப். 12 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் பொதுமக்கள், வியாபாரிகள், மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ் தலைமையில் நடந்தது. சங்கரன்கோவில் ஆர்டிஓ கவிதா, நகராட்சி கமிஷனர் சாம் கிங்ஸ்டன், தாசில்தார் பரமசிவன், நகர காவல் ஆய்வாளர் பாலமுருகன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு முன்னிலை வகித்தனர்.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு பேசியதாவது: சங்கரன்கோவில் நகராட்சி கலைஞர் நூற்றாண்டு தினசரி நாளங்காடி மற்றும் எலுமிச்சை மார்க்கெட் திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அண்ணா பேருந்து நிலையம் ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி மேற்கண்ட 2 மார்க்கெட்டிற்கும் பேருந்துகள் வந்து செல்வதற்கு ஏதுவாக அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் மார்க்கெட் வழியாக செல்ல வேண்டும்.
மேலும் நகரின் முக்கிய பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வர வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலனை செய்து சங்கரன்கோவிலுக்கு வரும் பேருந்துகள் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி தற்காலிக பேருந்து நிலையம் அருகே உள்ள தினசரி மார்க்கெட்டில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதேபோல் கழுகுமலை ரோடு, தெற்கு ரத வீதி, தேரடி பகுதி மற்றும் வடக்கு ரத வீதி பகுதிகள் வழியாக நகர மற்றும் புறநகர் பேருந்துகள் சென்று வந்தால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு ஏதுவாக இருக்கும் என்ற கோரிக்கையை பரிசீலனை செய்து உடனடியாக பேருந்துகள் மாற்றி விடப்படும் எனவும், சங்கரன்கோவில் பகுதிக்கு புறவழிச் சாலை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் மேலும் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



