கோவை, ஜூலை 25 –
கோவை மாவட்டம் சூலூரில் துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி கூட்டம் நடைபெற்றது. அதில் புதிதாக மாவட்டத்தில் நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலராக பதவியேற்றுள்ள நாயக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்படுத்திட்ட அலுவலர் கதிர்வேல் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கடந்த 16 வருடமாக நாட்டு நலப் பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆறுமுகம் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட தொடர்பு அலுவலர் திட்ட அலுவலர்களுக்கு வரும் காலங்களில் முகாம் தொடர்பான மற்றும் சிறப்பு முகாம் பற்றி எடுத்துரைத்தார். தொடர் பணியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களை தேர்ந்தெடுக்கும் முறை அவர்களுக்கான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அந்த வகையில் முதல் வருடம் 120 மணி நேரம் இரண்டாவது வருடம் 120 மணி நேரம் மற்றும் 7 நாட்கள் சிறப்பு முகாம் மாணவர்கள் பங்கு பெற வேண்டும். அப்பொழுது தான் மாணவத் தொண்டர்களுக்கு A சான்றிதழ் பெற தகுதியானவர்கள்.
இந்த 240 மணி நேர பணிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலங்கள், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி மற்றும் சிறப்பு விருந்தினர்களை அழைத்து பேச வைத்தல், மரம் நடுதல், பள்ளி வளாகத் தூய்மை உலக யோகா தினம், நாட்டு நலப்பணி திட்ட நாள், ஆளுமை பண்புகளை வளர்த்தல், சாலை பாதுகாப்பு, சுதந்திர தின அணிவகுப்பு குடியரசு தின அணிவகுப்பு போன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள நாட்டு நலத்திட்ட அமைப்புகள் உள்ள பள்ளிகளில் இருந்து திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.