மார்த்தாண்டம், ஜூன் 7 –
குமரி மாவட்டத்திற்கு கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வழியாக இறைச்சி, மீன் கழிவுகளை ஏற்றியபடி வாகனங்கள் செல்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தாலும் இந்த பிரச்சினை நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது.இந்தநிலையில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சக்தி குளங்கரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் கழிவுகள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை பொதுமக்கள் குழித்துறை பகுதியில் வைத்து சிறைபிடித்தனர். பின்னர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.உடனே போலீசார் விரைந்து வந்து அந்த கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் டிரைவர், கிளீனரை பிடித்து விசாரித்தனர். அதே சமயத்தில், தூத்துக்குடி பகுதிக்கு கொண்டு செல்லும் மீன்கள் இருப்பதாக டிரைவர் கூறியுள்ளார். அது உண்மையா? என அதற்குரிய ஆவணத்தை கேட்டுள்ளனர். இதனை டிரைவர் முறையாக ஒப்படைக்கவில்லையென்றால், மீன்கழிவுகளை கேரளாவுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.