விழுப்புரம், ஜூலை 29 –
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் செல்லங்குப்பத்தில் கெடார் அரசு மாதிரி பள்ளியில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளிக் கட்டிடம், மாணவ, மாணவியர் விடுதி கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மாநில அரசு மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு ஒரு மாதிரி பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் விக்கிரவாண்டி வட்டம் செல்லங்குப்பத்தில் கெடார் அரசு மாதிரி பள்ளியில் மாநில அரசு மற்றும் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.19.33 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளி கட்டடம், மாணவ மற்றும் மாணவியர் விடுதி தலா ரூ.18.57 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் விடுதிகள் கட்டடப்பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
புதியதாக கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளி கட்டடமானது தரை தளத்துடன் இரண்டு தளங்களாக கட்டப்பட்டு வருகிறது. இதில் 22 வகுப்பறைகள், 1 நூலகம், 1 வரைபட அறை, 2 கணினி அறைகள், 3 இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆய்வகங்கள், 2 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் அறை, 1 பல்நோக்கு அரங்கம், 1 தலைமையாசிரியர் அறை மற்றும் 1 அலுவலக அறை உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மாணவ மற்றும் மாணவியர் தனி விடுதி கட்டடமானது தரை தளத்துடன் ஐந்து தளங்களாக கட்டப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 416 மாணவர்கள் மற்றும் 416 மாணவியர்கள் தங்கி கல்வி பயில்வதற்கான அறை வசதிகள் உள்ளது. இந்த விடுதியில் தங்கும் அறை, பொதுவான அறை, நூலகம், சமையல் அறை, காப்பாளர் அறை, கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி வளாகத்திற்கு சுற்றுச்சுவர், வளாகத்தினைச் சுற்றி உயர்மின் கோபுர விளக்குகள், வளாகம் முழுவதும் சிமெண்ட் சாலை, சுகாதாரமான குடிநீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன் மாதிரி பள்ளி கட்டடம், மாணவர் மற்றும் மாணவியர் விடுதி கட்டுமானப்பணியினை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து கெடாரிலிருந்து செல்லங்குப்பம் பள்ளி வளாகம் வரை தார்சாலை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு சாலை அமைப்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் பாலாஜி, ராஜவேல், உதவி பொறியாளர்கள் மணிமாறன், இம்ரான், பூவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவனேசன், ஜீலியம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.