குலசேகரம், ஜன. 27 –
குமரி மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் குலசேகரம், அரசமூடு சந்திப்பில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் வக்கீல் வின்சர் தலைமை வகித்தார். திமுக செய்தி தொடர்பு துணை செயலாளர் சூரியா கிருஷ்ணமூர்த்தி, மாநில இலக்கிய அணி துணை செயலாளர் கொக்கரக்கோ செளமியன், இளம் பேச்சாளர் ஜெபின் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
செய்தி தொடர்பு துணை செயலாளர் சூரியா கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: விடுதலைப் போராட்டக் தியாகிகளுக்கு நிகராக போற்றப்பட வேண்டியவர்கள் மொழிப்போர் தியாகிகள். இந்தியை திணித்து ஆதிக்கம் செலுத்த முயன்றவர்களை கதற விட்டவர்கள் தமிழர்கள். இன்று இந்தியை மும்மொழி கொள்கை என்ற பெயரில் திணிக்க முயற்சிக்கிறார்கள். அதனை நாம் ஏற்று கொள்ளாததால் 3 ஆயிரத்து 500 கோடி கல்வி நிதி முடக்கப்பட்டுள்ளது. இந்தியை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் நம்மிடம் இருந்து வரியை வசூல் செய்து விட்டு நமக்கு தர வேண்டியதை தரவில்லை.
தமிழுக்கு எதிரான சதிகளை முறியடித்து எல்லாவித வளர்ச்சிகளையும் நாம் பெற்றுள்ளோம். நமது வளர்ச்சியை தடுக்க மும்மொழி கொள்கையை புகுத்த முயலுகிறார்கள் என பேசினார்.
கூட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட துணை செயலாளர்கள் இராஜ், டாக்டர் புஷ்பலீலா ஆல்பன் உட்பட பலர் பேசினர். மேலும் பலர் கலந்து கொண்டனர்.



