மார்த்தாண்டம், ஜூன் 19 –
குமரி மாவட்டம் பேச்சிப்பாறையை அடுத்த குற்றியாறு வனப்பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் பால்வெட்டும் தொழில் மற்றும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமீப காலமாக மயிலாறு, குற்றியாறு, கோதையாறு வனப் பகுதிகளில் ஒற்றை யானை சுற்றி நடக்கிறது. இது சில வீடுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் நடைபெற்றது. வனத்துறையினர் வன விலங்குகள் புகாமல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இந்த பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளியான ராஜன் (45) என்பவர் சகத் தொழிலாளர்களுடன் அப்பகுதியில் ரப்பர் பால் வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்குக் காட்டு யானை ஒன்று வந்துள்ளது. இதனைப் பார்த்த சக தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். மாற்றுத்திறனாளியான ராஜன் யானையை கவனிக்காமல் நின்று பின்னர் பார்த்த உடன் ஓடியுள்ளார். ஆனால் யானை விடாமல் துரத்திச் சென்று அவரைக் காலால் மிதித்துள்ளது. இதில் அவரது வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. ராஜனின் அலறல் சத்தம் கேட்டு மற்ற தொழிலாளர்கள் யானையை துரத்தியுள்ளனர். யானை அங்கிருந்து சென்ற நிலையில் ராஜனை மீட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜனுக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர்.