கன்னியாகுமரி, ஜூலை 22 –
கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் ஏராளமான விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. இந்த நிலையில் கன்னியாகுமரி ரட்சகர் தெருவை சேர்ந்த வசீகரன் என்பவரது விசைப்படகில் இன்று அதிகாலையில் சகாய ஆன்றனி ஜானி என்பவர் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவினர் மீன்பிடிக்கச் செல்ல தயாராகிறார். அதில் ஒடிசா மாநிலம் கஞ்சம், கோலப்பந்தாவைச் சேர்ந்த கோந்தி சன்யாசி (40) என்பவரும் 13 பேர் குழுவில் இருந்தார்.
அவர் குமரியிலேயே தங்கியிருந்து தொழிலுக்கு சென்று வந்துள்ளார். இவர் விசைப்படகில் தூங்கியுள்ளார். இவரது உறவினர் ஜெயராமையா எழுப்பிய போது, அவர் அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், கோந்தி சன்யாசியை விவேகானந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோந்தி சந்நியாசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன கோந்தி சன்யாசிக்கு அங்கம்மா என்ற மனைவியும் ராமையா, சேம் என்ற 2 மகன்களும் உள்ளனர்.



