நாகர்கோவில், ஜூலை 15 –
குமரி மாவட்டம் காளிகேசம் சூழியல் சுற்றுலாத்தளத்தில் திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் திட்டத்தின் கீழ் சுற்றுலா பயிற்சி வகுப்புகளை குத்துவிளக்கேற்றி துவக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா தலைமையில் நடந்தது. மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் பிரசாந்த் முன்னிலை வகித்தார்.
கலெக்டர் துவக்கி வைத்து தெரிவிக்கையில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு பெற்றிடும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் திட்டத்தின் கீழ் Eco Tourism & Hospitality Executive and Tourist Guide பயிற்சி வகுப்புகள் காளிகேசம் சூழியல் சுற்றுலா தலத்தில் நேற்று முதல் 30 நாட்கள் நடைபெறும். இப்பயிற்சியில் பழங்குடியின இளைஞர்கள் உட்பட 40 இளைஞர்கள் கலந்துகொண்டனர். பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சி முடித்தவர்களுக்கு சுற்றுலாத்துறையில் சுயவேலைவாய்ப்புகள் பெற முடியும். சுற்றுலா தளங்களை சுற்றிக்காட்டுவது மட்டுமல்லாமல் அந்த இடத்தின் முக்கிய தகவல்களை சுற்றுலா பயணிகளுக்கு தெரிவிக்கும் வண்ணம் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி முடித்தவர்கள் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டியாக செயல்படலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், உதவி இயக்குநர் திறன் மேம்பாட்டு பயிற்சி லட்சுமிகாந்தன், வனத்துறை அலுவலர்கள், பயிற்சியாளர்கள், இளைஞர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.