நாகர்கோவில், பிப். 27 –
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2026 விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தங்கள் கூட்டணியையும், வேட்பாளர்களையும் தேர்வு செய்து வருகின்றன. இந்நிலையில் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி தமிழகமெங்கும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்து போட்டியிடவுள்ளதாக அதன் நிறுவன தலைவர் சுரேஷ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து புதிய இந்தியா புதிய மக்கள் கட்சியின் தேசிய செயலாளர் அருள்பிரகாஷ் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது. அதன்படி கிள்ளியூர் தொகுதிக்கு மாநில துணைத்தலைவர் ஆன்றனி, பத்மநாப்புரம் தொகுதிக்கு மாவட்ட தலைவர் ஷாஜூ சிங், விளவன்கோடு தொகுதிக்கு தேசிய செயலாளர் அருள்பிரகாஷ், குளச்சல் தொகுதிக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ்குமார், நாகர்கோவில் தொகுதிக்கு மாவட்ட செயலாளர் ஜெனிபர் புஷ்ப ராஜா, கன்னியாகுமரி தொகுதிக்கு மாவட்ட மகளிரணி தலைவி சகாய அகிலா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சமநீதி, சம உரிமை, சம முன்னேறம் என்ற குறிக்கோளோடு புதிய அரசியல், புதிய சிந்தனை, புதிய ஆட்சி என்ற முழக்கத்தோடு இந்த தேர்தலை சந்திக்கிறோம். 234 தொகுதிகளிலும் வேட்பாளர் இறுதிகட்ட தேர்வு நடைபெற்று வருகிறது. இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத, இன, மொழி, ஜாதி வேறுபாடின்றி அனைவரும் சமம், ஒன்றுபட்ட தேசமே வலிமை மிக்க இந்தியா என்ற கருத்துக்களை முன்வைத்து புதிய அரசியலை கையிலெடுத்து வளர்ச்சி மிக்க இந்தியாவை உருவாக்க கிராமப்புற மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை உரிமைகளை உறுதி செய்திட புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி போராடும் என கூறினார்.


