நாகர்கோவில், ஆக. 4 –
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள புற்றுநோய் கதிரிக்க சிகிச்சை மையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட தென்மாவட்ட மக்களின் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் பேசியதாவது:-
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.6.78 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டெலிகோபால்ட் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார். இந்த புதிய கதிர்வீச்சு சிகிச்சைப் பிரிவு செயல்பாட்டிற்கு வந்துள்ளதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த புற்றுநோய் மருத்துவ பயனாளிகள் தங்கள் மாவட்டத்திலேயே தரமான கதிரிவீச்சு சிகிச்சையைப் பெறும் வசதி ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவுக்கு சென்று சிகிச்சை பெறுவதை தவிர்த்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலேயே கதிர்வீச்சு சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இச்சிகிச்சையானது புற்றுநோய் மருத்துவ பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். ஆண்டுதோறும் சுமார் 500-க்கும் மேற்பட்ட புற்றுநோய் மருத்துவ பயனாளிகள் இச்சிகிச்சையால் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிகிச்சையை இடையூறின்றி முழுமையாக பெறும் வாய்ப்பு மருத்துவ பயனாளிகளுக்கு கிடைக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரிபிரின்சி லதா, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லியோ டேவிட், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர், உறைவிட மருத்துவர்வர்கள் மரு.விஜயலட்சுமி, மரு.ரெனிமோள், மருத்துவர்கள், செவிலியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



