கன்னியாகுமரி, ஜுன் 6 – குமரி மாவட்டம் இராஜாவூரை சேர்ந்தவர் அந்தோணிமுத்து மனைவி எமிலெட் (55) இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வெளியூரில் வேலை செய்து வருகிறார். மகளுக்கு கடந்த மாதம் உள்ளூரிலேயே திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று மதியம் தனது பெற்றோருக்கு பலமுறை போன் செய்தும் போன் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மகள் உடனடியாக வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அங்கு தனது பெற்றோர்கள் மயக்க நிலையில் இருந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மகள் உடனடியாக அவர்களை மீட்டு
108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுகுறித்து எமிலெட் கொடுத்த புகாரின் அடிப்படையில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் சுமார் 50 வயது மதிக்கத் தகுந்த பெண் ஒருவர் இந்த தம்பதிகளிடம் முருங்கைக்காய் கொண்டு வந்து கொடுத்து நம்பிக்கையாய் பேசி அவர்களுக்கு மறைத்து வைத்திருந்த குளிர்பானத்தை கொடுத்து மூதாட்டியின் கழுத்தில் கிடந்த ஆறரை பவுன் தங்க நகையை பறித்துச் சென்றது தெரிய வந்துள்ளது. இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.