நாகர்கோவில், மார். 18 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடி முடிந்து, நெல் அறுவடை நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு மாநிலம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையம் அமைத்திருப்பது போன்று குமரி மாவட்டத்திலும் 10 நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது.
ஆனால் குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று, நான்கு வாரங்களாக அறுவடை செய்யப்பட்டு, அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்வதற்கு பதிலாக தட்டிக்கழித்து கொள்முதல் செய்யாமல் அலைக்கழித்து, விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக, விவசாயிகளால் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்ட நெல் மலைபோல் நிலையங்களுக்கு உள்ளேயும், வெளியே சாலையிலும், அருகிலுள்ள காட்டுப்புறங்களிலும், மண்தறையிலும், திறந்த வெளியிலும் கொட்டப்பட்டு சேதமடைந்து வருகிறது. மேலும், தார்ப்பாய் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால் விலங்குகளால் சேதமடைந்தும், மழையில் அழிந்து முளைவிட்டும் வருகிறது.
ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய தொகையைக்கூட பெரும்பாலான விவசாயிகளுக்கு உடனே வழங்காமல் இழுத்தடித்து மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் செண்பகராமன்புதூர் உள்ளிட்ட நெல் கொள்முதல் நிலையங்களை நேரில் பார்வையிட்டு உண்மை நிலையை கண்டறிந்தனர்.
அதைத்தொடர்ந்து, ஒன்றிரண்டு தினங்களுக்குள் அனைத்து நெல்லையும் உடனே கொள்முதல் செய்வதுடன், தனியார் முதலாளிகளுடன் கூட்டு வைத்திருக்கக்கூடிய வேளாண்மைத்துறை மற்றும் நுகர்பொருள் வாணிபகழக ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு நெல்கொள்முதல் நிலையத்தில் போராட்டம் உடனே நடத்துவதென முடிவெடுத்துள்ளனர்.
இதற்கிடையில் செண்பகராமன்புதூர் நெல்கொள்முதல் நிலையத்தை ஒட்டியுள்ள ‘டாஸ்மாக் குடோனில்’ மதுபான ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்த மது வகைகளை பொக்கிஷம் போன்று பாதுகாத்து வாகனங்களில் ஏற்றி அரசு மரியாதையுடன் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் விவசாயிகள் விளைவித்த அமுதமான நெல்லை அவர்களிடமிருந்து கொள்முதல் செய்து அப்போதைக்கப்போது வாகனங்களில் ஏற்றி ‘சேமிப்பு கிடங்கிற்கு’ அனுப்பி வைப்பதற்கு பதிலாக தெருவில் சீரழிய விட்டுள்ளனர்.
ஆகவே, வருகிற 20/3/2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு செண்பகராமன்புதூர் நெல்கொள்முதல் நிலையத்தை ஒட்டி எதிரிலுள்ள ‘டாஸ்மாக் குடோனுக்கு’ வரும் மதுபான வாகனங்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்த உள்ளோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.



